வரலாறு காணாத கனமழை : பரிதவிக்கும் உத்தரகாண்ட் மாநிலம் - பேரிடரில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பலி

உத்தரகாண்டில் பெய்துள்ள வரலாறு காணாத கனமழையால் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
வரலாறு காணாத கனமழை : பரிதவிக்கும் உத்தரகாண்ட் மாநிலம் - பேரிடரில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பலி
Published on

கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வரும் சூழலில், செவ்வாய்கிழமை அன்று பெய்த அதிதீவிர கனமழையால் 2 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.

இமயமலை தொடரில் உள்ள நைனிடால்(Nainital) நகரில் 3 நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், ரயில்வே தண்டவாளங்கள், சாலைகள், மேம்பாலங்கள் அனைத்து சேதமடைந்துள்ளன. அதோடு நீர்நிலைகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் வந்ததால் பல பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

கோசி ஆற்றில் கரைபுரளும் வெள்ளத்தால், கரையோரம் உள்ள சொகுசு விடுதிக்குள் நீர் புகுந்து அந்த பகுதியே வெள்ளக்காடானது. கனமழை வெள்ளத்தில் சிக்கி நைனிடால் மாவட்டத்தில் மட்டும் 27க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல மாநிலம் முழுவதும் உயிர் சேதம் அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 15 குழுக்களும், இந்திய விமானப்படையும் ஈடுபட்டுள்ளன.

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் மக்கள் அச்சப்படாமல் அரசுக்கு ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். உத்தரகாண்ட் மக்களுக்கு தேவையான உதவிகள் உடனடியாக வழங்கப்படும் என பிரதமர் மோடியும் உறுதி அளித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com