

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 2017ஆம் ஆண்டு தன்னை பங்கர்மவ் தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். அப்போது தனக்கு 17 வயது என்றும் அந்த பெண் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக குல்தீப்சிங் செங்காரை போலீசார் கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து குல்தீப் சிங் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி பாதிக்கப்பட்ட
இளம்பெண், உறவினர்களுடன் சென்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழக்க, பாதிக்கப்பட்ட பெண் படுகாயமடைந்தார். அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த விபத்து தொடா்பாக குல்தீப்சிங் செங்கார் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை டெல்லி மாவட்ட நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றம் மாற்றியது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தினந்தோறும் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தர்மேஷ் சர்மா , குற்றம்சாட்டப்பட்ட குல்தீப் சிங் செங்கார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஷிசிங் என்பவர் விடுதலை செய்யப்பட்டார்.