குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய பெற்றோர்.. காரணம் கேட்டு அலறி ஓடிய போலீசார் - இந்த இன்ஸ்டா இன்னும் என்ன செய்ய காத்திருக்கோ..!

x

மேற்குவங்க மாநிலத்தில், ரீல்ஸ் எடுக்க ஐபோன் தேவைப்பட்டதால், தனது 8 மாத ஆண் குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி. இந்த அதிர்ச்சிகர சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

பெற்ற குழந்தையை விற்கும் அளவிற்கு, ரீல்ஸ் மோகம் ஆட்டிப்படைக்கிறது என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது தற்போது அரங்கேறியுள்ள சம்பவம்...

மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயதேவ் - சதி தம்பதியினர்... இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன.

தம்பதி இருவரும் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கிடைக்கும் வருமானத்தை விட சொகுசு வாழ்க்கையே இவர்களுக்கு குறியாக இருந்துள்ளது.

ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் தம்பதிக்கு ஐபோனில் ரீல்ஸ் எடுத்து லைக்ஸ் வாங்குவது என்பதில் அதீத ஆர்வம்...

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவு செய்வதற்காக, ஐபோன் வாங்குவதற்கு பணமில்லாத தம்பதிக்கு, தங்களது 8 மாத ஆண் குழந்தையை விற்க மனம் வந்ததுதான் கொடூரத்தின் உச்சம்...

அதன்படி, 8 மாத ஆண் குழந்தையை பிரியங்கா கோஷ் என்ற பெண்ணிடம், தம்பதி இருவரும் விற்றுள்ளனர்.

குழந்தையை விற்ற பணத்தில், ஜெயதேவ் - சதி தம்பதியின் நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்களை உணர்ந்துள்ளனர் அக்கம்பக்கத்தினர்...

கையில் ஐபோன், முகத்தில் மேக்கப் என ஜாலியாக சுற்றித் திரிந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினருக்கு, வீட்டில் 2 குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே இருந்ததால் சந்தேகம் எழுந்துள்ளது.

தனது 8 மாத குழந்தை உறவினர்கள் வீட்டில் விட்டுள்ளதாக தம்பதி கூறினாலும், ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுபவர்களின் லைஃப் ஸ்டைல் மாறியதுதான் அக்கம்பக்கத்தினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள் அதிகமல்லவா?... திடீரென வசதி வந்தால் விடுவார்களா என்ன?...

அதன்படி குழந்தை குறித்து விசாரித்தபோது, அதில் பல மர்மங்கள் இருப்பதை உறவினர்கள் உணர்ந்துள்ளனர். சந்தேகப்பட்டு, தம்பதியின் குழந்தை மாயமானது குறித்து அக்கம்பக்த்தினர் போலீசாரிடம் தகவல் சொல்லியுள்ளனர்.

அதன்படி வீட்டிற்கு வந்த போலீசார், அந்த நேரத்தில் வீட்டில் இருந்த குழந்தையின் தாய் சதியிடம் குழந்தை குறித்து விசாரித்துள்ளனர். முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், பின்னர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, சதி அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தது.

குழந்தை விற்று கிடைத்த பணத்தில் ஐபோன் வாங்கிக் கொண்டு, தம்பதி இருவரும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அனுபவித்ததாகவும் கூற, போலீசாருக்கோ உச்சக்கட்ட கோபம்...

அதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய் சதியையும், பணம் கொடுத்து குழந்தையை வாங்கிய பிரியங்கா கோஷ் என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான குழந்தையின் தந்தை ஜெயதேவை போலீசார் தேடி வருகின்றனர்.

பெற்ற குழந்தையை விட ரீல்ஸ் மோகம் தம்பதியின் கண்ணை மறைத்தது வேதனையின் உச்சம்...


Next Story

மேலும் செய்திகள்