

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ந் தேதி ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐய்யபனுக்கு அபிஷேகமும் , ஆராதனையும் நடைபெற்று வந்த நிலையில், முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை 6.45 மணி அளவில், ஜோதி வடிவாக ஐயப்பன், பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக, பந்தள அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்க கூடிய ஆபரணங்கள் சபரிமலையை அடைந்தது. 18 படிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணிவித்து பூஜைகள் செய்த உடன், ஐயப்பனை ஜோதி வடிவில் பக்தர்கள் தரிசித்தனர். ஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலை , பம்பை , நிலக்கல் , சன்னிதானம் போன்ற இடங்களில் பக்தர்கள் குவிந்திருந்தனர். பாதுகாப்பு பணிக்காக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.