மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான ஆரேவில் உள்ள இரண்டாயிரத்து 646 மரங்களை, மெட்ரோ ரயில் பணிகளுக்காக வெட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராடி வந்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த பகுதி வனப்பகுதி அல்ல என்று தெரிவித்ததுடன், மரங்களை வெட்ட தடைவிதிக்க மறுத்து விட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் இரவோடு இரவாக மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்துள்ள போலீசார் 55 பேரை பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆரேவில் எதிர்ப்பு அதிகரித்து வருவதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது.