அந்து பூச்சிகளை காக்கும் மும்பை பெண் - அந்து பூச்சியின் சிறப்பு தான் என்ன?

அழிந்து வரும் பூச்சி இனங்களுள் ஒன்றாக இருக்கும், அந்து பூச்சிகளை பாதுகாக்கும் முயற்சியில் களம் இறங்கி இருக்கிறார், சுபலட்சுமி.
அந்து பூச்சிகளை காக்கும் மும்பை பெண் - அந்து பூச்சியின் சிறப்பு தான் என்ன?
Published on

* மும்பையை சேர்ந்தவர் சுபலட்சுமி. இயற்கை மீது நேசம் கொண்ட இவர், வண்ணத்துப்பூச்சி வகை இனத்தை சேர்ந்த அந்துப்பூச்சிகளின் சிறப்புகள் பற்றியும், அவை ஏன் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை விவரித்தும் புத்தகம் எழுதி இருக்கிறார். அந்துப்பூச்சிகளின் வாழ்வியலை ஆராய்ச்சி செய்து, முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

* உலகளவில் 1 லட்சத்து 42 ஆயிரம் அந்துப்பூச்சி இனங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் 12 ஆயிரம் அந்து பூச்சி இனங்கள் உள்ளன. அவற்றின் நிறங்களும் வடிவங்களும் திகைப்பூட்டும் ரகத்தை சேர்ந்தவை. இவை வெப்ப மண்டல பிரதேசங்களில் அதிகம் உலா வருகின்றன. பசுமை சூழ்ந்த வனப்பகுதிகள் தான் இவற்றின் பிறப்பிடம்.

* இந்தியாவில் வடகிழக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் தென்படுகின்றன. ஓலெண்டர், ஹாக்மோத் போன்ற சில இன அந்துப்பூச்சிகள் காடுகளை விட நகர, கிராமப்பகுதிகளில் தான் அதிகமாக காணப் படுகின்றன. அவை இரவு நேரங்களில் வீடுகளை சுற்றி வட்டமடித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

* தாவரங்களில் மகரந்தச் சேர்க்கைக்கு வித்திடுவதன் மூலம் பறவைகள், வவ்வால்கள் மற்றும் மனித இனத்திற்கான உணவு உற்பத்திக்கு, அந்துப்பூச்சிகள் தான் உதவுகின்றன.

* கடந்த 10 ஆண்டுகளாக அந்துப்பூச்சி இனங்கள் பற்றி, சுபலட்சுமி ஆராய்ச்சி செய்து வருகிறார். மருத்துவராக வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருந்தது. அது கைகூடாத நிலையில் அந்துபூச்சிகளை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

* ஆரம்பத்தில் இவருக்கு, வண்ணத்துப்பூச்சிகள் மீது தான் ஈர்ப்பு இருந்தது. அந்துபூச்சி இனத்தை பற்றி கேள்விப்பட்டதும் அவை பற்றிய தகவல்களை திரட்ட தொடங்கினார். இந்தியாவில் உள்ள அந்துப்பூச்சி இனங்கள் பற்றி முழுமையான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர், பின்னர் அதிலே மூழ்கிப் போய்விட்டார்.

* பூங்காக்கள், வன விலங்கு சரணாலயங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். பறவையினங்கள், வன விலங்குகளை புகைப்படம் எடுப்பது, தோட்டக்கலையில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் குழந்தைகள் ஈடுபட உற்சாகப்படுத்த வேண்டும் என்று, சுபலட்சுமி வலியுறுத்துகிறார். இதுமட்டுமின்றி, அந்து பூச்சி இனங்களைக் காப்பாற்றவும் களமிறங்கியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com