இந்திய தொழில் கூட்டமைப்பு அமைப்பான FICCI அமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தற்சார்பு பாரத திட்டம் பாதுகாப்பு துறையிலும், மிக முக்கிய பங்களிப்பை அளிக்கும் என குறிப்பிட்டார். உலகிலேயே மிகப்பெரிய ராணுவ படையை கொண்ட நாடாக இருந்தாலும் இன்னமும் சில முக்கியமான துறைகள் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாகவும் மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடிய நிலையே உள்ளதாக குறிப்பிட்டார். பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட புதிய சீர்திருத்தங்கள் மற்றும் 74 சதவீத அந்நிய முதலீடு போன்ற பல்வேறு கொள்கைகளின் காரணமாக பாதுகாப்பு துறை, உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தெரிவித்தார். லடாக் எல்லை பகுதியில் ராணுவ கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.