

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார் - திரையுலகினர்,ரசிகர்கள் அதிர்ச்சி
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்.மறைந்த முதுபெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனான புனித் ராஜ்குமாருக்கு, ஜிம்மில் உடல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் சுயநினைவை இழந்த அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு அவர் உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் நவீன சிகிச்சை முறையில் இதயத்தை இயக்க முயற்சித்த நிலையில் அது பலன் கொடுக்கவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 46 வயதே ஆன நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனித் ராஜ்குமார் மறைவு காரணமாக கர்நாடகா முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, புனித் ராஜ்குமாரின் உடல் மருத்துவமனையிலிருந்து சதாசிவ நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.