

காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெரு மழையில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஹொன்சார் கிராமத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு, பெருமழை கொட்டி தீர்த்தது. இதனால், அம்மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். 17 பேரை பேரிடர் மீட்பு துறையினர் மீட்டனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பெருமழை காரணமாக 19 பேர் மாயமாகி விட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த பகுதியில் 8 வீடுகளும் பலத்த சேதமடைந்துள்ளன. கிஷ்த்வார் மாவட்டத்தில் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், நீர்நிலைகளுக்கு அருகிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.