தியாகிகளின் வீடு தேடிச் சென்று பென்சன் தர வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை

ஓய்வூதியத்துக்காக சுதந்திர போராட்ட தியாகிகளை அலைய விடக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தியாகிகளின் வீடு தேடிச் சென்று பென்சன் தர வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை
Published on

மதுரை நாட்டார் மங்கலத்தை சேர்ந்த 91 வயதான சுதந்திர போராட்ட தியாகி பெரியய்யா, மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் கேட்டு ஆட்சியரிடம் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பெரியய்யா தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 'ஓய்வூதியம் வழங்குமாறு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய உள்துறை செயலாளர் சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, கிருஷ்ணவள்ளி அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணை முடிந்த நிலையில், மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும், மத்திய அரசு 8 வாரங்களுக்குள் ஓய்வூதியம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுதந்திர போராட்ட தியாகிகளை ஓய்வூதியத்துக்காக அலைய விடக் கூடாது எனவும் விண்ணப்பிக்கும் அவசியம் கூட இல்லாமல் வீடு தேடிச் சென்று ஓய்வூதியம் அளிப்பது அரசுகளின் கடமை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கு தொடர்ந்த தியாகி பெரியய்யா, தற்போது உயிருடன் இல்லை என்பதும் வழக்கை அவரது வாரிசுகள் நடத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com