

பி.எஸ்.4 ரக வாகனங்களை வரும் ஏப்ரல் முதல் தேதிக்கு பின்னர் விற்பனை செய்யக் கூடாது என 2018 அக்டோபா் 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவில் மாற்றம் கோரி ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.வி. விஸ்வநாதன், 17 ஆயிரத்து 260 பி.எஸ்.4 ரக பயணிகள் கார்கள், 14 ஆயிரம் வாடகை வாகனங்கள், 2 லட்சம் இரு சக்கர வாகனங்கள் இன்னும் விற்கப்படாமல் உள்ளதாகவும், இவற்றை விற்பனை செய்ய 30 நாள்கள் கூடுதல் கால அவசாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். கொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி, பி.எஸ்.4 ரக வாகனங்களை விற்பனை கால நீட்டிப்பு அளிக்க முடியாது எனவும், நாட்டின் சுற்றுச் சூழலுக்கு தியாகம் செய்ய கற்றுக் கொள்வோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஊரடங்கு நிறைவடைந்த 10 நாள்களுக்குள் அந்த வாகனங்களை விற்றுக் கொள்ள அனுமதி அளித்த நீதிபதிகள், இந்த வாகனங்களை டெல்லி மற்றும் தலைநகர் மண்டலத்தில் விற்பனை செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.