ஆந்திர படகு விபத்தில் 46 பேர் பலி? - கோதாவரி ஆற்றில் இருந்து 8 பேரின் உடல்கள் மீட்பு

பப்பிகொண்டா மலைக்கு 72 சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் படகு நேற்று கோதாவரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆந்திர படகு விபத்தில் 46 பேர் பலி? - கோதாவரி ஆற்றில் இருந்து 8 பேரின் உடல்கள் மீட்பு
Published on
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பப்பிகொண்டா மலைக்கு 72 சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் படகு நேற்று கோதாவரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 26 பேர் குச்சிலூர் கிராமத்தில் மீட்கப்பட்டு உள்ளனர். இதனிடையே நேற்று மாலை வரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 46 பேரை தேடும் பணி மீண்டும் இன்று காலை தொடங்கியுள்ளது. கோதாவரி ஆற்றில் நேற்று பிற்பகல் முதல் வெள்ளம் அபாய அளவை ஒட்டி கரைபுரண்டு ஓடிய நிலையில் இந்த படகு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. விபத்துக்குள்ளான படகுக்கு உரிமம் இல்லை என்றும், எச்சரிக்கையை மீறி படகை இயக்கி உள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர அரசு தலா பத்து லட்சமும், தெலங்கானா அரசு 5 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளது. தவுலேஸ்வரம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது தொடர்பான எச்சரிக்கை மற்றும் கோதாவரியில் படகு இயக்க விதித்த தடையை மீறி தனியார் படகை இயக்கியதே இந்த விபத்துக்கு காரணம் என கூற​ப்படுகிறது. இந்த விபத்து தொடர்பான விரிவான விசாரணைக்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com