ரயில் மோதி தாயுடன் உயிரிழந்த குட்டி யானை - உலக யானைகள் தினத்தில் சோகம்
உலக யானைகள் தினத்தில் சோகம்: ரயில் மோதி தாய், குட்டி யானைகள் உயிரிழப்பு நடந்தது என்ன ?? செய்தியாளர் கார்த்திக் சொல்லும் பகீர் தகவல்
ரயில் எஞ்சின் பெட்டியில் சிக்கிய இரண்டு யானைகளை ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் கயிறு கட்டி 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு யானையின் உடல்களை மீட்ட வனத்துறை மற்றும் ரயில்வே துறையினர்
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வந்த ரயில் மோதியதில் இரண்டு யானைகள் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு - தமிழ்நாட்டில் செயல்படும் AI தொழில்நுட்பம் கேரளாவில் இல்லாதது தான் உயிரிழப்புக்கு காரணம்
கோவை மாவட்டம் தமிழக–கேரள எல்லையையொட்டி கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையார் பகுதியில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை என இரண்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
வாளையார் பகுதியில் நேற்று இரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது ரயில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. ரயில் சக்கரங்களில் சிக்கி உடல்கள் நசுங்கிய நிலையில் தண்டவாளத்தில் கிடந்தன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கேரள வனத்துறையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தண்டவாளத்தில் கிடந்த யானைகளின் உடல்களை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலேயே தமிழக எல்லை அமைந்துள்ளது. இதனால் தமிழக–கேரளா இடையே இயக்கப்படும் முக்கிய ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
விபத்து காரணமாக ‘பி’ டிராக் தண்டவாளத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த வழியாக செல்லும் ரயில்கள் ‘ஏ’ டிராக் வழியாக மாற்றி இயக்கப்பட்டன.
உலக யானைகள் தினத்தன்று தாய் மற்றும் குட்டி யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து தொடர்பாக கேரள வனத்துறையினர் மற்றும் ரயில்வே துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
