"மீண்டும் ஒரு பிறவி எடுப்பேன்.. அப்போதும் பாட்டே எழுதுவேன்" - வாலிப கவி வாலியின் ஆசை

காவிய கவிஞர் வாலியின் பிறந்த நாளான இன்று, அவரை நினைவு கூறுகிறது, இந்த செய்தி தொகுப்பு.
x

காவிய கவிஞர் வாலியின் பிறந்த நாளான இன்று, அவரை நினைவு கூறுகிறது, இந்த செய்தி தொகுப்பு.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிறந்த ஒருவர் 2கே கிட்ஸ்களே பொறாமைப்படும் அளவிற்கு தனது இறுதி மூச்சு வரை எழுத்துக்களில் இளமை ஊஞ்சலாட வலம் வந்தார் என்றால் அது நிச்சயம் இந்த வாலிப கவிஞர் வாலியாக தான் இருக்க முடியும்.

1931 ஆம் ஆண்டு இதே நாளில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதனாக பிறந்த வாலி... பிற்காலத்தில் தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேல் 15 ஆயிரம் பாடல்கள் வரை எழுதியது... இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படாத சாதனை.

எம்.எஸ்.வியின் இசையில் கற்பகம் படத்தின் பக்கத்து வீட்டு பருவ மச்சான் பாடல் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்த வாலி... பின்னர் எம்.ஜி.ஆரின் ஆதர்ச பாடலாசிரியாராகி, எம்.ஜி.ஆர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

வாலி என்றால் பாசிட்டிவிட்டி... பாசிட்டிவிட்டி என்றால் வாலி என்று சொல்லிவிடலாம்..! கவியரசு கண்ணதாசன் கோலோச்சி கொண்டிருந்த அதே காலத்தில் அறிமுகமாகி, காலத்தின் போக்கிற்கேற்ப வளைந்து கொடுத்து தனக்கென்று தனி இடத்தை தகவமைத்து கொண்டவர் அவர்...

ஹே ராம்... பார்த்தாலே பரவசம் போன்ற படங்களில் நடித்த வாலி... பாண்டவர் பூமி போன்ற பல பிரமிப்பூட்டும் கவிதை நூல்ககளையும் கொடுத்துள்ளார்.

அம்மா மீது அலாதி பிரியமும் பாசமும் கொண்ட பையன் அவர்... அதனால் தான் அம்மா பாட்டு என்றாலே இன்றும் நம் நினைவிற்கு முதலில் வருவது வாலியாக தான் இருக்கும்.

பெரியாரின் அன்பை சம்பாதித்த ஒரு தீவிர முருக பக்தர் பெரியாரின் ஒற்றை கொள்கையை மட்டும் கடைசி வரை ஏற்க மறுத்தார்.

ஆனால் ஒரு போதும் ஆன்மீகத்தை பிறரிடம் திணிக்க நினைத்ததில்லை. அதற்கு அவரின் இந்த முருகன் பாடலே சான்று.

எம்ஜிஆர்... கலைஞர் என இருவருடனும் நெருக்கம் காட்டியவர்... அரசியல் கருத்துக்களையும் தனது பாடல்களில் வெளிப்படுத்த தவறியதில்லை.

82 வயது வரையிலும் அவர் பேனாவை கீழே வைக்க முயன்றது கூட கிடையாது..! தான் மீண்டும் ஒரு பிறவி எடுக்க வேண்டும் அப்போதும் பாடல் எழுத வேண்டும் என்றே ஆசை கொண்டிருந்த வாலி, இன்றும் தனது பாடல் வரிகளின் மூலம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்