சென்னை கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வனவிலங்கு நலஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் ஈஸ்வரன் என்ற படத்தில், நடிகர் சிம்பு பாம்பை பிடித்து சாக்கு பையில் போடும் காட்சிகள் வெளிவந்துள்ளதாகவும், அந்த காட்சியில் பாம்பு துன்புறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வனத்துறையிடம் விளக்கமளித்த இயக்குனர் சுசீந்திரன், சிம்பு பிடிப்பது நிஜ பாம்பு அல்ல என்றும், கிராபிக்ஸ் பாம்பு என்றும் கூறியிருந்தார். ஆனால் அதற்கான ஆதாரங்களை அவர் இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி, இரண்டாவது முறையாக நடிகர் சிம்பு, இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.