கிரிப்டோ கரன்சி என ஆசை வார்த்தை...சொந்த வீட்டை விற்ற நபர் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x

சென்னையில் கிர்ப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைத்து பொது மக்களிடம் கைவரிசை காட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர். சென்னை எண்ணூரை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவர் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏரையூரில் உள்ள வீட்டை 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில், பணம் முழுவதையும் அதே ஊரை சேர்ந்த ஜான் ரோசாரியோ என்பவர் மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். சில மாதங்கள் கழித்து கிரிப்டோ கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாததால் அதிர்ச்சியடைந்த கொளஞ்சியப்பன், இது குறித்து ஜான் ரோசாரியோவிடம் கேட்டிருக்கிறார். அப்போது, முறையாக பதிலளிக்காத ஜான் ரோசாரியோ தனது கூட்டாளிகளான மரியா சூசை மற்றும் தனசேகர் மூலம் கொளஞ்சியப்பனை மிரட்டிய நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு, கிரிப்டோ கரன்சியின் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக வட்டி பெறலாம் என பொதுமக்களிடம் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்ததாகவும், முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற மீண்டும் முதலீடு செய்ய வேண்டும் எனவும் கூறி கைவரிசை காட்டியது தெரியவர, மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்