இணையத்தை கலக்கும் 'வெள்ளை முதலை'.. "ஷேர் செய்தால் நன்மை நடக்கும்" - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

x

சில வருடங்களுக்கு முன்பு அச்சிடப்பட்ட பேப்பர் ஒன்றில், குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரை மேற்கொள்காட்டி... அதில் சில தகவல்களையும் குறிப்பிட்டு... இறுதியாக இதை 50, 100 நகல் எடுத்து நீங்களும் பகிர வேண்டுமென்றும், இல்லையென்றால் நீங்கள் நினைத்தது நடக்காமல் உங்களுக்கு அசாம்பாவிதம் தான் நடக்கும் என நம்மை பீதியடைய செய்த சம்பவம் நினைவிருக்கும்... இதனால் பயந்து போன சிலர் பல நூறு நகல்கள் எடுத்து, அதை பலருக்கும் பரப்ப, அதை படித்தவர்களில் சிலர் மீண்டும் நகலெடுக்க சற்று பரபரப்பையே ஏற்படுத்திய சம்பவம் என சொல்லலாம்... இந்நிலையில், இந்த சம்பவம் கொஞ்சம் அப்டேட்டடு வெர்ஷனாக, தற்போது மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது...

சமூக வலைதளங்களில் நம்மில் பலரும் பார்த்திருப்போம் ஒரு வெள்ளை முதலை புகைப்படத்தை... அந்த புகைப்படத்தில், நீங்கள் மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டு இந்த புகைப்படத்தை ஷேர் செய்தால் நினைத்தது நடக்கும் என கூறி பதிவிட, அதையும் சிலர் பகிர ஆரம்பித்த நிலையில், இணையத்தில் டெரெண்ட் அடித்து வருகிறது இந்த வெள்ளை முதலை... உலகம் முழுவதும் பல வகையான முதலைகள் இருந்தாலும் சில முதலைகள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. அப்படியான ஒரு முதலை தான் இந்த வெள்ளை முதலை எனப்படும் அல்பினோ முதலை. அதுவும் உலகில் இதன் மொத்த எண்ணிக்கையே 100ல் இருந்து 200 வரை தான் இருக்குமாம்...

அது சரி அந்த 200ல நம்ம இந்தியாவுல எத்தனை என ஆராய்ந்தால், ஒடிசாவின் பிதர்கனிகா தேசிய உயிரியல் பூங்காவில் அரிய வகை வெள்ளை முதலைகள் 20 இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது... தற்போது இந்த அல்பினோ முதலையை அதிர்ஷ்ட முதலையாக மாற்றியது, ஒரு முகநூல் பயனாளர்... கடந்த மே மாதம் 30 ஆம் தேதி ட்ரீ இன்னீஸ் என்ற முகநூல் பயனாளர் அல்பினோ முதலை படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இதை ஒவ்வொரு முறையும் நீங்கள் சேர் செய்யும் போது, உங்களை தேடி ஒரு நல்ல செய்தியோ அல்லது குறிப்பிட்ட பணமோ வந்து சேரும் என பதிவிட்டு தீயை பொருத்தி போட்டார்.... அது அப்படியே பத்தி எரிந்து தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீயாக ட்ரெண்டாகி வருகிறது... ஆனால், இதனை நமது மீம்ஸ் கிரியேட்டர்கள் வழக்கம்போலவே நகைச்சுவையோடும், கேலியோடும் கையாண்டு வருகின்றனர்.... மீம்ஸ் கிரியேட்டர்கள் சில கேப்சனோடு பதிவிட்டு பகிரப்படும் அல்பினோ புகைப்படம் அது ஒரு பக்கம் ட்ரெண்டாகி வருகிறது....அவ்வாறு அவர்கள் பகிர்ந்ததில் முதலிடம் பிடித்தது, அடுத்த ஐபிஎல்லில் ஆர்சிபி கோப்பை வெல்ல வேண்டுமாம்... நாங்கள் வண்மத்தை கக்கவில்லை மக்களே... அப்படித்தான் பேசிக்குறாங்க....


Next Story

மேலும் செய்திகள்