செந்தில் பாலாஜி ரெய்டு தணியாத நிலையில்..அடுத்தடுத்து தமிழக அரசியலை சூடாக்கும் ED...நடந்தது என்ன..?

செந்தில் பாலாஜி ரெய்டு தணியாத நிலையில்..அடுத்தடுத்து தமிழக அரசியலை சூடாக்கும் ED...நடந்தது என்ன..?
Published on

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சோதனையின் போது அரங்கேறிய சில முக்கிய நிகழ்வுகள் குறித்து பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....

கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையும்... நள்ளிரவு செந்தில் பாலாஜி மீது பாய்ந்த கைது நடவடிக்கையின் தாக்கமும் இன்னும் தணியாத சூழலில் மீண்டும் தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளனர் அமலாக்கத்துறையினர்...

இந்த முறை அவர்களின் பார்வை திரும்பியிருப்பது தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் பக்கம்....

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் ஒரே நேரத்தில் திடீர் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறையினர், விழுப்புரத்தில் பூட்டப்பட்டிருந்த பொன்முடியின் வீட்டில் காத்திருந்து சோதனை நடத்தினர்.....

இந்த செய்தி பரவிய அடுத்த கணமே திமுக நிர்வாகிகளும், கட்சியினரும், சோதனை நடைபெறும் இடத்தின் முன்பு அடுத்தடுத்து குவியத்தொடங்கினர்...

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் அமைச்சர் பொன்முடி வெளியே புறப்பட தயாராக இருந்தபோது, திடீரென அமலாக்கத்துறையினர் உள்ளே புகுந்து சோதனை நடத்தினர்... துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினர் வீட்டை சுற்றி நிறுத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சோதனை நடத்தப்பட்டது...

அப்போது, காலை 8 மணியளவில் அமைச்சரை சந்தித்து மனு கொடுப்பதற்காக மன்னார்குடியில் இருந்து வந்திருந்த திமுக நிர்வாகி ஒருவரும், சோதனை பரபரப்புக்குள் சிக்கி மணிக்கணக்கில் அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்குள்ளே முடக்கப்பட்டார்....

இதனிடையே, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் வீட்டில் உணவு டெலிவிரி பாய் ஒருவர், 175 ரூபாய் மதிப்புள்ள 15 பர்கர்களை அமலாக்கத்துறையினர் ஆன்லைனில் ஆர்டர் செய்ததாக கூறி டெலிவிரி செய்து சென்றார்....

(ப்ரீத்)

இந்நிலையில், விழுப்புரம் சண்முகாபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ள சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது...

அந்த மருத்துவமனைக்கு நோயாளியுடன் சென்ற வாகனத்தை மறித்த அமலாக்கத்துறையினர், பாதுகாப்பு காரணமாக வாகனத்தை உள்ளே விட மறுத்த நிலையில், சிகிச்சைக்காக நோயாளியை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்குள் தூக்கி சென்று அனுமதித்தனர்..

(ப்ரீத்)

இதற்கிடையே, விழுப்புரத்தில் உள்ள அமைச்சரின் வீட்டு லாக்கரும், பீரோக்களும் அமலாக்கத்துறையினரால் திறக்க முடியாமல் போயுள்ளது... லாக்காரை திறக்க அவன் இவன் பட பாணியில் வெளியிலிருந்து ஆள் அழைத்து வரப்பட்ட நிலையில், அவராலும் லாக்கரை திறக்க முடியவில்லை....

கடந்த முறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய போது, தலைமை செயலகத்தினுள் புகுந்து செந்தில் பாலாஜியின் அறையில் அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது...

இதேபாணியில், இந்த முறை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடியின் அலுவலகத்திற்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வரக்கூடும் எனக்கருதி, தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது...

(ப்ரீத்)

இது ஒருபுறம் இருக்க, அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார்...

தனது வீட்டில் இருந்து சுமார் 20 மணிநேர சோதனைக்கு பிறகு, சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு இரவில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் பொன்முடி, சுமார் 7 மணி நேர விசாரணைக்கு பின், அதிகாலை 4 மணியளவில் விடுவிக்கப்பட்டார்....

அமைச்சர் செந்தில் பாலாஜியை போல், பொன்முடி மீதும் கைது நடவடிக்கை பாயுமோ என கட்சியினர் பரபரப்பில் இருந்த நிலையில், பொன்முடி விடுவிக்கப்பட்டது அவர்களை பெரு மூச்சு விடச்செய்தது...

இந்நிலையில், மாலை 4 மணிக்கு அமைச்சர் பொன்முடியை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக கூறி, அமலாக்கத்துறையினர் சம்மன் விடுத்திருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் அமலாக்கத்துறையினரால் தொடர்ந்து தகித்துக்கொண்டே இருக்கிறது.....

X

Thanthi TV
www.thanthitv.com