யமுனை ஆற்றின் நிலை என்ன? பிரதமர் மோடியிடம் கூறிய அமித் ஷா...

x

டெல்லி உள்ளிட்ட வடமாநில வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையாலும், ஹரியானாவில் இருந்து யமுனை ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பாலும், டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, யமுனை ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, டெல்லியில் நிலவும் வெள்ள பாதிப்பு சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். டெல்லியில் பல்வேறு இடங்களில் சூழ்ந்துள்ள நீரின் அளவு அடுத்த 24 மணி நேரத்தில் குறையும் என்றும், டெல்லி துணைநிலை ஆளுநருடன் இணைந்து சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பிரதமரிடம் அமித் ஷா கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள போதிய எண்ணிக்கையிலான தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்