பரிகாரம் செய்ய வந்த பெண்ணை வீட்டில் தங்க வைத்த அர்ச்சகருக்கு நேர்ந்த பரிதாபம்..இரவோடு இரவாக செய்த பகீர் காரியம் - அதிரவைக்கும் சிசிடிவி காட்சி

x

புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு பெண் உட்பட இருவரை வீட்டில் தங்க வைத்த கோவில் அர்ச்சகர், 20 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை பறிக்கொடுத்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு......

திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரோகிணி ஐயர். இவர், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் கடந்த 40 ஆண்டுகளாக அர்ச்சகராக வேலை செய்து வருகிறார். இவருக்கு, இரண்டு மகள்கள் உள்ள நிலையில், அவர்கள் திருமணம் ஆகி சென்றுவிட்டதால், ரோகிணி ஐயரும், அவரது மனைவி ராஜேஸ்வரியும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி ரோகிணிஐயரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட 50 வயது பெண், தனக்கு 30 வயதில் மகன் இருப்பதாகவும், அவருக்கு திருமணம் நடைபெற, தாங்கள் சனீஸ்வர பகவானுக்கு பூஜை செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, ரோகிணிஐயர் மறுநாள் காலை வந்து தன்னை சந்திக்கும்படி அவர்களிடம் கூறியுள்ளார். அதன்படி ரோகிணி வீட்டுக்கு சென்ற இருவரும், தங்களுக்கு வெளியில் தங்கி பழக்கம் இல்லை என்றும், அதனால், உங்கள் வீட்டிலேயே தங்கி காலை சாமி தரிசனம் செய்து விட்டு புறப்படுவதாகவும், அதற்கு ஆயிரம் ரூபாய் பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர், இருவரையும் வீட்டில் உள்ள ஒரு அறையில் தங்க வைத்த ரோகிணி ஐயர், தனது மனைவியுடன் வேறொரு அறையில் சென்று தூங்கியுள்ளார். அப்போது, இரவோடு இரவாக மர்ம நபர்கள் இருவரும், வீட்டின் பீரோவை உடைத்து, அதில் இருந்த சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள்,1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சில வெள்ளிப்பொருட்களையும் திருடிவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது

மறுநாள் காலை அர்ச்சகர் எழுந்து பார்த்த போது, பீரோவில் இருந்த நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் இருவரும் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து ரோகிணி ஐயர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த திருநள்ளாறு போலீசார், தப்பியோடிய இருவரையும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்ட அர்ச்சகர் இருவரை வீட்டில் தங்க வைத்ததால், 20 சவரன் நகை 1.5 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்