காத்துவாக்குல இரண்டு காதல்..கர்ப்பிணி மனைவியுடன் காதலியை கொன்ற கணவன்

காத்துவாக்குல இரண்டு காதல்..கர்ப்பிணி மனைவியுடன் காதலியை கொன்ற கணவன்
Published on

பொள்ளாச்சியில் இளைஞரின் முக்கோண காதலால் கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுஜய்...

இவர் கோவை, கவுண்டர்பாளையத்தில் ஆன்லைன் வர்த்தகம் செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார்.

இந்த நிறுவனத்தில் பல பெண்கள் ஊழியராகவும், பார்ட் டைமாக சில கல்லூரி மாணவிகளும் பணிபுரிந்து வந்துள்ளனர்...

அப்போது, கேரளாவை பூர்விகமாக கொண்டு கோவை, கவுண்டார்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த ரேஷ்மா என்பவர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த நிலையில், ரேஷ்மா மீது சுஜய்க்கு காதல் ஏற்பட்டுள்ளது....

இதில், இருவரும் ஒருவரையொருவரை காதலித்து வந்த நிலையில், திடீரென இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு உறவில் விரிசல் விழுந்துள்ளது...

இதன்பின் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், சுஜய் நடத்தி வந்த நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதையும் ரேஷ்மா நிறுத்தியுள்ளார்...

அப்போது, சுஜயின் நிறுவனத்தில் பார்ட் டைமாக பணிபுரிந்து வந்த கல்லூரி மாணவி சுபலட்சுமி என்பவர், இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்....

அவரின் காதலிலும் தகராறு ஏற்படவே, சுபலட்சுமியை அவரது காதலன் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது...

இந்த தகராறில் ஹீரோ போல தலையிட்டு சுபலட்சுமியின் காதலனை சுஜய் தட்டிக் கேட்ட நிலையில், சினிமா பாணியில் சுபலட்சுமியின் காதல் பார்வை சுஜயின் பக்கம் திரும்பியது..

ஏற்கெனவே, காதல் தோல்வியால் ரணமான சுஜயின் மனதை, சுபலட்சுமியின் காதல் மயில் தோகையாக வருடியிருக்கிறது...

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கவே, திடீரென சுஜயின் முதல் காதலியும், முன்னாள் காதலியுமான ரேஷ்மா மீண்டும் சுஜயுடன் பழக ஆரம்பித்திருக்கிறார்....

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட விஜய்சேதுபதி போல, இரு பெண்களையும் ஒரே நேரத்தில் காதலித்து வந்த சுஜய், ஒரு கட்டத்தில் சுபலட்சுமிக்கு தெரியாமலேயே ரேஷ்மாவை திருமணம் செய்திருக்கிறார்...

இதில், ரேஷ்மா 8 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், திருமணத்திற்கு பின்பும், தனக்கு திருமணமானதை மறைத்து சுபலட்சுமியுடன் சுஜய் பழகி வந்ததாக தெரிகிறது...

இது நாளடைவில் ரேஷ்மாவுக்கு தெரியவரவே, ஆத்திரமடைந்த அவர் சுஜயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சுபலட்சுமி மீது பயங்கர கோபத்தில் இருந்துள்ளார்...

உன்னை திருமணம் செய்து கொண்ட பின்பு சுபலட்சுமியுடன் பழகுவதை நிறுத்தி விட்டேன் என ரேஷ்மாவை எவ்வளவு தான் சமாதானப்படுத்த முயன்றும் சுஜய் தோற்றுப் போயுள்ளார்..

இதனிடையில், சுஜய்க்கு திருமணமானதும், அவரின் மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதும் சுபலட்சுமிக்கு தெரியவந்துள்ளது..

இது தொடர்பாக சுஜயிடம் சுபலட்சுமி தகராறு செய்த நிலையில், சம்பவத்தன்று தனது மனைவியின் தூண்டுதலின் பேரில் சுபலட்சுமியை சுஜய் வீட்டுக்கு அழைத்துள்ளார்...

இதன்படி கடந்த 2 ஆம் தேதி பொள்ளாச்சி அடுத்த கோட்டம்பட்டியில் உள்ள சுஜயின் வீட்டுக்கு வந்த சுபலட்சுமியை, கர்ப்பிணி பெண்ணான ரேஷ்மாவும், சுஜயும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்...

இதில், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்...

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், 3 தனிப்படைகள் அமைத்து தம்பதியை தேடி வந்தனர்...

இதில், கோபாலபுரம் சோதனை சாவடியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில், தம்பதி கேரளா தப்பி சென்றது தெரியவந்தது...

இதையடுத்து, கேரளா விரைந்த போலீசார், கோழிக்கோடு மாவட்டம் கண்ணனூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த கர்ப்பிணி பெண் ரேஷ்மாவையும், அவரது கணவர் சுஜயையும் கைது செய்து பொள்ளாச்சி அழைத்து வந்தனர்...

இருவர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ள போலீசார், மேலும் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இளைஞரின் முக்கோண காதல் விளையாட்டால் இளம் பெண் கொலை செய்யப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

X

Thanthi TV
www.thanthitv.com