மருத்துவ உலகில் நடந்த அதிசயம்.. துண்டான தலை..ஓட்ட வைத்த டாக்டர்ஸ் - கிட்ட தட்ட மரணத்தை தொட்டு வந்த சிறுவன்

x

இஸ்ரேலில் விபத்து ஒன்றில் சிக்கி துண்டிக்கப்பட்ட சிறுவனின் தலையை மீண்டும் உடலுடன் ஒட்ட வைத்து மறுவாழ்வு கொடுத்திருக்கிறார்கள், மருத்துவர்கள் . இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்

அதிசயம் ஆனால் உண்மை... என நம்மை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள் இஸ்ரேலை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள்... மருத்துவ உலகில் இதுவும் சாத்தியமே என செய்து காட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கும் அவர்கள் புரிந்துள்ள சாதனையை கேட்டால் நீங்களும் வாயடைத்து போய்விடுவீர்கள்.

விபத்தில் உடலில் இருந்து துண்டான சிறுவனின் தலையை அறுவை சிகிச்சை மூலம் ஒட்ட வைத்து... அந்த சிறுவனின் கண்களுக்கு இன்று தெய்வமாகியிருக்கிறார்கள், ஜெருசேலமை சேர்ந்த மருத்துவர்கள்.

12 வயதான சுலைமான் ஹாசன் என்ற அந்த சிறுவன், பைக்கில் சென்ற போது... எதிரே வந்த காரில் மோதி விபத்தில் சிக்கியுள்ளான். இந்த விபத்தில் மண்டை ஓட்டை முதுகெலும்புடன் இணைக்கும் தசைநார்கள் மற்றும் தசைகள் கிழிக்கப்பட்டு, உட்புறமாக சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் சதை மட்டும் அப்படியே இருந்துள்ளது.இதனை ஆங்கிலத்தில் internal decapitation என்று சொல்கிறார்கள்.

இது போன்று உட்புறமாக தலை துண்டிக்கப்படுவது என்பது... அரிதிலும் அரிதாக ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே நடக்கும் நிகழ்வாம்.

இப்படி விபத்தில் சிக்கிய சிறுவன் உடனடியாக ஜெருசேலத்தில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டதும்... அங்கு மருத்துவர்கள், பிளேட் மற்றும் rod கொண்டு சிறுவன் தலையை முதுகெலும்புடன் ஒட்ட வைக்க நீண்ட நேரம் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சை கைக்கொடுக்குமா? என்ற சந்தேகத்தோடு தான் மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார்கள்... காரணம் இதுவரை internal decapitation குறித்து அவ்வளவாக அறியப்பட்டதே கிடையாது...

இதேபோல் விபத்தில் உட்புறமாக தலை துண்டிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுபவர்களில் 70 சதவீதம் பேர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிடவதால் தான்.

அதோடு, இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றால்...முக்கிய ரத்த நாளங்கள் அப்படியே இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை சாத்தியமாகுமாம். ஏனென்றால் மூளைக்கான ரத்த ஓட்டம் பாதுகாப்பட வேண்டியது இங்கு மிகவும் முக்கியம்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு மாதம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட சிறுவனுக்கு தற்போது நரம்பியல் குறைபாடு எதுவும் காணப்படவில்லை என கூறும் மருத்துவர்கள்... சிறுவன் முழு உடல் நலத்துடன், யார் உதவியும் இன்றி தனது வேலைகளை தானே செய்து வருவதாகவும் கூறுகிறார்கள்.

சிறுவன் நன்றாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்த பிறகே இந்த செய்தியை வெளியுலகத்துடன் பகிர மருத்துவ மனை முடிவு செய்திருக்கிறது. இப்படி மரணத்துடனே போராடி... சிறுவனின் உயிரை காத்து... அவனுக்கு மறுவாழ்வு அளித்துள்ள இஸ்ரேல் மருத்துவர்களை உலகமே பாராட்டி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்