பாட்டியை துடிதுடிக்க கொன்று அப்படியே சாப்பிட்ட கொடூர இளைஞர் - நாய் கடி மனிதனை இப்படி மாற்றுமா..?

x

ராஜஸ்தானில், இளைஞர் ஒருவர், மூதாட்டியைக் கொன்று நரமாமிசம் சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் அரங்கேறிய இந்த சம்பவம், சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு, கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பாலி மாவட்டத்தில் உள்ள சாரதானா கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி... வயல்வெளியில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அவரை திடீரென கல்லால் தலையில் தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மூதாட்டியை, இரக்கமே இல்லாமல் உயிர் போகும் வரை அடித்தே கொன்றுள்ளார் அந்த கொடூர இளைஞர்...

ஒருவித படபடப்புடன் ஆக்ரோஷமாகவே இருந்த இளைஞர், மூதாட்டியை கொலை செய்தது மட்டுமல்லாமல், அவர் செய்த அடுத்த காரியம் தான், உடலை நடுங்க வைக்கும் அளவிற்கு இருந்தது.

காட்டுமிராண்டித் தனமாக மாறிய இளைஞர், இறந்த மூதாட்டியின் உடலை வெறித்தனமாக கடித்துத் தின்றுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உள்ளூர்வாசி ஒருவர், கிராமத்திற்குள் சென்று நடந்த சம்பவங்களைக் கூறி, பொதுமக்களை அழைத்து வந்துள்ளார்.

மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நரமாமிசம் சாப்பிட்டபடி, ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட இளைஞரை பிடித்து, காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த மூதாட்டி சாந்தி தேவி என தெரியவந்தது. கைதான இளைஞர், மும்பையை சேர்ந்த 24 வயதான சுரேந்திர தாக்கூர் எனவும் போலீசார் உறுதிப்படுத்தினர்.

மிருகத்தனமாக நடக்கும் அளவிற்கு, இளைஞருக்கு உளவியல் ரீதியாக எதாவது பிரச்சினை இருக்குமோ என உணர்ந்த போலீசார், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.

இளைஞரை மருத்துவர் பரிசோதித்தபோதுதான், அவரின் இந்த கொடூர குணத்திற்கான காரணம் தெரியவந்தது. அதாவது, Hydrophobia என்ற நோயால் இளைஞர் பாதிக்கப்பட்டிருப்பது உணரப்பட்டது. வெறிநாய் கடி வாங்கிய இளைஞர், அதற்கு உரிய சிகிச்சை எடுக்காமல் வவிட்டதன் விளைவுதான், தற்போது ரேபீஸ் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும், தண்ணீரைக் கண்டால் ஒரு வித பயத்திற்கு இளைஞர் ஆளாகி இருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இளைஞர் மீது கொலை மற்றும் நரமாமிசம் சாப்பிட்டதாக வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்