அண்ணனை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கொடூர தம்பி... பதற வைக்கும் சிசிடிவி காட்சி - நடத்து என்ன..?

x

இராமநாதபுரம் அருகே சொத்து பிரச்சினை காரணமாக அண்ணனையே தம்பி ஒருவர் வீட்டின் மாடியில் இருந்து தள்ளிவிடும் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐந்து வயதில் அண்ணன்- தம்பிகள், பத்து வயதில் பகையாளிகள் என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது ராமநாதபுரம் அருகே நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள பழனி வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவருக்கும் அதே ஊரில் வசித்துவரும் அவரது தம்பி துரை சிங்கத்திற்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக இருதரப்பினரும் நீதிமன்றத்தை நாடிய நிலையில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று துரைசிங்கம் தன்னுடைய வீட்டின் மேல் தளத்தில் மழைநீர் வெளியேற தகர கூரை அமைத்து கொண்டிருந்தார். அந்த கூரையில் இருந்து வடியும் நீரானது ரத்தினசாமியின் வீட்டிற்குள் விழும்படியாக அமைத்ததால் அங்கு சென்று ரத்தினசாமி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த துரைசிங்கம் அண்ணன் என்றும் பாராமல் ரத்தினசாமியை வீட்டின் மேல் தளத்திலிருந்து வேகமாக தள்ளியுள்ளார்.

இதனை எதிர்பாராத ரத்தினசாமி நிலைகுலைந்து தடுமாறி சுற்றுச்சுவர் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த ரத்தினசாமி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது, மனைவி மற்றும் மகள்கள் கூச்சலிட்டு கதறிய நிலையில், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, ரத்தினசாமியை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேவிபட்டினம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் துரைசிங்கம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்