மருத்துவ கல்வியில் 50% இடங்கள் ஒதுக்கீடு நிறுத்தி வைப்பு"உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு, 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2021-22ம் கல்வியாண்டுக்கு 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்த அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், நடப்பு 2022-23ம் கல்வியாண்டுக்கு மொத்தமுள்ள 100 சதவீத இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்துவது குறித்து மத்திய அரசின் பொது சுகாதார பணிகள் தலைமை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதை எதிர்த்தும், தமிழக அரசு 2020ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கி, கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி அரசு மருத்துவர்கள் ஸ்ரீஹரிபிரசாந்த் உள்பட இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்தி நிரப்ப அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 2021-22 ம் ஆண்டுக்கு மட்டும் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டுகளுக்கு நீட்டிக்கவில்லை எனவும் கூறி, மத்திய அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதிக்காததால், கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடுத்த கல்வியாண்டுகளுக்கும் பொருந்தும் என்பதால் கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெற அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்தார்.

இதுசம்பந்தமாக எந்த விளக்கமும் பெறத் தேவையில்லை என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் சங்கரன் குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களூம் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதியளித்த உச்ச நீதிமன்ற உத்தரவு நடப்பு கல்வியாண்டுக்கு பொருந்துமா என்பதை உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசோ, மனுதாரரோ விளக்கம் பெற 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

அதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்