ரயில்வே கட்டுமான பணி பள்ளத்தில் மிதந்த மாணவர்கள் - தேனியில் பரபரப்பு
சிவராம் நகரைச் சேர்ந்த சிவசாந்தனும், கண்ணாத்தாள் கோயில் தெருவைச் சேர்ந்த வீரராகவனும் 7ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் பள்ளி நண்பர்கள். தேனி ரயில்வே நிலைய பகுதியில் ரயில்வே துறை சார்பாக சேமிப்பு கிட்டங்கி அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்காக மிகப்பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் அந்த பள்ளத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி இருந்தது. இங்கு குளிப்பதற்காக சிவசாந்தனும், வீரராகவனும் நேற்று மாலை சென்றுள்ளனர். இரவு முழுவதும் அவர்கள் வீடு திரும்பாத நிலையில், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளத்தின் அருகில் அவர்களின் சைக்கிள் நிற்பதைக் கண்டு அதிர்ந்து ஒருவேளை சிறுவர்கள் உள்ளே விழுந்திருக்கலாம் என கருதி சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விடிய விடிய தேடுதல் வேட்டை நடைபெற்ற நிலையில், 2 மாணவர்களும் பள்ளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.