மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்

x

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, இன்று முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்து, அதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன்படி, மின் நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் குறுஞ்செய்தியை அனுப்பி வருகிறது. இதற்கிடையே, ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரியம் உத்தரவிட்டது. மின் நுகர்வோர் அனைவரும் ஒரே நேரத்தில் மின் வாரிய இணையதளம் சென்று, தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மின் வாரிய இணையதளத்தின் சர்வர் கடந்த சில நாட்களுக்கு முன் முடங்கியது. ஆதார் எண்ணை இணைக்க முடியாமலும், மின் கட்டணத்தைச் செலுத்த முடியாமலும் நுகர்வோர் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதிவரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. பண்டிகை நாள்களை தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்