நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் - 3 பெண்களுக்கு ஜாமின் மறுப்பு
மதுரையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த 6 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றபோது, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக பாஜகவை சேர்ந்த 9 பேரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர். இவர்களின் ஜாமின் மனு, மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் சந்தானகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கைதான தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும், குமார் உள்ளிட்ட 6 பேருக்கு ஜாமீன் வழங்கியும் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். தனலெட்சுமி உட்பட 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.