ஆஸி. ஓபனில் 10வது முறை சாம்பியன்...களத்தில் கண்ணீர் சிந்திய ஜோகோவிச்
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரனான ஆஸ்திரேலிய ஓபன் தொடர், மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.
இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸை செர்பியாவைச் சேர்ந்த பிரபல வீரர் ஜோகோவிச் எதிர்கொண்டார்.
முதல் செட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், 6க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டை தனதாக்கினார்.
பின்னர் 2வது செட்டில் சிட்ஸிபாஸ் சவால் அளித்த நிலையில், 7க்கு 6 என்ற கணக்கில் அந்த செட்டை டை-பிரேக்கரில் ஜோகோவிச் வென்றார்.
தொடர்ந்து,3வது செட்டையும் அதே புள்ளிகள் கணக்கில் வென்ற ஜோகோவிச், 10வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை முத்தமிட்டார்.
ஒட்டுமொத்தமாக இது, ஜோகோவிச் வெல்லும் 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
இந்த வெற்றி மூலம், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார்.
கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் ஆட, ஜோகோவிச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதே மெல்போர்ன் மைதானத்தில் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது கவனிக்கத்தக்கது.