கடும் ரிஸ்க் எடுத்து கொள்ளை..கல்லாவை பார்த்ததும் கிறுகிறு ஆன திருடன் - அல்வா கொடுத்த ஓனர்

x

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள மனம்பூண்டி கிராமத்தில் இரும்பு கடை நடத்தி வருபவர் மும்மூர்த்தி. கிட்டதட்ட 12 வருடமாக இரும்பு கடை நடத்தி வரும் இவர், கடையை சாதாரண மேற்கூரையுடனே 12 வருடமும் நடத்தி வந்திருக்கிறார்... சம்பவத்தன்று கடையை திறந்த மும்மூர்த்தி, கடையினுள் பொருட்கள் ஆங்காங்கே சிதறிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்... ஒரு இடத்தில் மட்டும் சூரிய வெளிச்சம் சுளீரென அடித்தபடி இருந்ததால், அண்ணாந்து பார்த்த அவர் கடையின் மேற்கூரை பெயர்த்தெடுக்கப் பட்டிருப்பதை கண்டு மிரண்டு போயுள்ளார்...

உடனே, கடையில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்த போது, நள்ளிரவு ஒரு மணி அளவில் கடையின் மேற்கூரையை உடைத்து, அந்தரத்தில் தொங்கிய படி மர்மநபர் ஒருவர் கடையினுள் குதிப்பது தெரியவந்தது... நேராக கல்லாப்பெட்டி அருகே வந்த கொள்ளையன், கல்லாவை திறந்து போது, அதில் கிழிந்து போன 20 ரூபாய் மட்டுமே இருப்பதை பார்த்து மனமுடைந்து, விரக்தியடைந்திருக்கிறார்... உயிரை பணயம் வைத்து உள்ளே வந்தது.... இந்த 20 ரூபாய்க்கு தானா என மனதிற்குள் குமுற ஆரம்பித்த அவர், சரி வந்ததற்கு இந்த இருபதாவது கிடைத்ததே என அதையும் எடுத்துக்கொண்டு வந்த வழியே ஏறி கிளம்பியுள்ளார்...

கடையில் மேற்பகுதி கூரை என்பதால் கடையிலுள்ள பணம் அனைத்தையும் இரவு கடையை மூடும் போது வீட்டிற்கு எடுத்து சென்றுவிடுவேன் என்கிறார் கடை உரிமையாளர் மும்மூர்த்தி... அதே சமயத்தில், கடையில் ஒரு இளைஞர் வேலை பார்ப்பதாகவும், காலையில் முதல் ஆளாக அவர்தான் கடைக்கு வருவாரென்றும், அவருக்காக கல்லாவில் 150 ரூபாயை தினமும் வைத்து செல்லும் நான், அந்த இளைஞர் தற்போது விடுமுறை என்பதால் அதையும் வைக்கவில்லை என்கிறார்...கிழிந்த 20 ரூபாய் நோட்டுடன் வெளியேறிய கொள்ளையன் சம்பவத்தன்று அடைந்த மன வேதனையை காட்டிலும், உரிமையாளர் சொன்ன அந்த வார்த்தை அவரது மனதை மேலும் குமுற செய்திருக்கும்....


Next Story

மேலும் செய்திகள்