தேசிய விளையாட்டு போட்டி.. தமிழக மாணவர்களுக்கு நேர்ந்த நிலை..கோட்டை விட்டதா தமிழகம்? காரணம் என்ன..?

x

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், இந்த ஆண்டு தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடிாயத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் ஆண்டுத்தோறும் தேசிய அளவில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளில் தகுதிப்பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

அதில் அவர்கள் பெறும் பதக்கங்களின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

உயர்கல்வி படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களில் சேர்வதற்கு தங்கப்பதக்கம் வென்றால் 190 மதிப்பெண், வெள்ளிப்பதக்கம் வென்றால் 160 மதிப்பெண், வெண்கலப்பதக்கம் வென்றால் 130 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துக் கொண்டாலே 50 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

நடப்பாண்டு 247 மாணவர்களை தேர்வு செய்து மே 29ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பள்ளி கல்வித் துறை , பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது குறித்த கடிதம் முறையாக சென்று சேரவில்லை எனவும் தகவல் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஆண்டுதோறும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு பள்ளி மாணவர்களுக்கு நிதி ஒதுக்கப்படும் நிலையில், நடப்பாண்டு அதற்கான நிதி முறையாக ஒதுக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேரும் பொழுது பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் கூடுதலாக மதிப்பெண்கள் விளையாட்டு பிரிவு தரவரிசையின் போது வழங்கப்படும். நடப்பாண்டில் அந்த வாய்ப்பினை தமிழக மாணவர்கள் இழந்துள்ளனர்.

இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சுரேஷ் வலியுறுத்தி உள்ளார்.

"தமிழக பள்ளி மாணவர்கள் தயாராக இருந்தனர்"

"தகவல் தொடர்பில் தவறு நடந்துள்ளதாக கூறப்படுகிறது"

"இனிமேல் தவறுகள் நடக்காமல் தடுக்க வேண்டும்"

பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் 36,000 கோடி ரூபாயில் 360 கோடி ரூபாயை ஒதுக்கினால் கூட, தேசிய அளவில், சர்வதேச அளவில் பல பதக்கங்களை தமிழக மாணவர்கள் பெறுவார்கள் என்றும் ராஜா சுரேஷ் தெரிவிக்கிறார்.

ராஜா சுரேஷ் , தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம்

"விளையாட்டுதுறைக்கு ரூ.10 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது"

"நீதி ஒதுக்கீட்டை அதிகரித்து தர வேண்டும்"

" சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்ல முடியும்"

உடற்கல்விக்கும், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விளையாட்டு துறை அமைச்சரும், பள்ளி கல்வி அமைச்சரும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, அதே டெல்லியில் அடுத்து 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் யோகா ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இரண்டு மாணவர்கள் , இரண்டு மாணவிகளும், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் இரண்டு மாணவர்கள், இரண்டு மாணவிகளையும் தேர்வு செய்யுமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்