சென்னை அருகே அமைச்சர் கார் மோதி, புது மனைவி கண் முன்னே இளைஞர் பலி

x

சென்னையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின் கார் சென்றது. கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அடுத்த மணமை அருகே சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது அமைச்சரின் கார் மோதியதில் பைக்கில் இருந்த புதுமண தம்பதியினர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் கணவர் ஜான்சன், சம்பவ இடத்திலேயே இறந்தார். மனைவி ரூத்பொன் செல்வி, படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த காரில் அமைச்சர் செல்லவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை சென்ற அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வர கார் டிரைவர் காரை ஓட்டி சென்றதாகவும்,அப்போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடலூரில் உள்ள தனது வீட்டிலிருந்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு தனது மனைவியுடன் ஜான்சன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் போலீசார் ஜான்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்