இனி தமிழக தியேட்டர்களில் IPL, வேர்ல்டுகப்? - ரசிகர்களுக்கு தரமான பக்காவான ட்ரீட் ரெடி

x

திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகள் ஒளிப்பரப்புவது, ஓடிடிகளில் ரிலீஸ் தேதி நிர்ணயிப்பது உட்பட, பல அதிரடி தீர்மானங்களை திரையரங்க உரிமையாளர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

அண்மையில் திரையரங்க டிக்கெட் கட்டணங்களை உயர்த்த வேண்டி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தது திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். ஏற்கனவே ஒடிடி தளங்களால் திரையரங்க உரிமையாளர்களுக்கு வசூல் ரீதியாக நெருக்கடி இருந்து வருவதால் அதற்கு தீர்வு காணும் வகையில் தீர்மானங்களை கொண்டு வந்துள்ளனர்.

இனி திரையரங்குகளில் வெளியாகும் புதிய திரைப்படங்கள், 8 வாரங்கள் கழித்தே ஓடிடி தளங்களில் வெளியாக வேண்டும் எனவும், அதற்கான விளம்பரங்களும் 4 வாரங்கள் கழித்தே வெளியிட வேண்டும் எனவும் தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓடிடியில் திரையிடும் போது, ஓடிடி மூலம் திரைப்படங்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு பங்கை திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே போல், பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஐபிஎல் போட்டிகளை திரையரங்கில் திரையிடவும் திட்டமிட்டு வருவதாக அவர்கள் கூறியது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

இதே போல் உலக கோப்பை, கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், உள்ளிட்ட போட்டிகளையும் திரையிட தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் ஆண்டுக்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து இக்கூட்டத்தில், அரசிடமும் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. திரையரங்குகளுக்கான மின்சார கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை குறைத்து வசூலிக்க வேண்டும் என்றும், திரையரங்குகள் வர்த்தகம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

கொரோனாவிற்கு பின்னர் தற்போது அறிமுக நடிகர்கள், இயக்குநர்களின் படங்கள் வரவேற்பை பெற்றும் வரும் நிலையில், புதுமுக நடிகர்களை வைத்தும் அதிக படங்கள் தயாரிக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கூட்டத்தில் திரையரங்க டிக்கெட் விலை உயர்த்துவது குறித்து எந்த ஆலோசனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்