மருந்து பொருட்கள் மோசடி.. அரசுக்கு ரூ.27 கோடி நஷ்டம்

x

மதுரையில் அளவுக்கு அதிகமாக மருந்துகள் வாங்கி மோசடியில் ஈடுபட்டதால் அரசுக்கு சுமார் 27 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி சுகாதாரத்துறை அதிகாரிகள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள 65 இஎஸ்ஐ மையங்களுக்கு தேவைப்படும் மருந்துகள் குறித்து கடந்த 2017 முதல் 2018 ஆம் ஆண்டு கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அப்போது, இயக்குனராக இருந்த இன்பசேகரன் மற்றும் மண்டல நிர்வாக மருத்துவ அதிகாரி ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளராக பணிபுரிந்த அமர்நாத் மற்றும் அசோக்குமார் ஆகியோர் கூட்டாக சுமார் 40 கோடிக்கு மருந்துகள் தேவை என போலியாக ஆவணம் தயாரித்துள்ளனர். இந்நிலையில், இந்த மோசடி விவகாரத்தில் ஆவணத்தில் கையொப்பமிட மறுத்த மண்டல அதிகாரி கல்யாணியையும் பணிமாற்றம் செய்ததால் அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கல்யாணியின் பணியிடை மாற்றத்திற்கும், மெமோவுக்கும் தடை விதித்தது. 13 கோடி ரூபாய்க்கு மருந்து போதும் என கல்யாணி சொன்னதை ஏற்க மறுத்து 40 கோடி ரூபாய் அளவில் அளவில் மருந்துகள் வாங்கி மோசடி செய்ததில் 27 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதும் உறுதியானது. இதன்பேரில் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புதுறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்