"மேல ஏறு யார் தடுக்குறானு பாப்போம்".. தீட்சிதர்களை திணறவிட்ட பெண் அதிகாரிகள்.. பதற்றமான சிதம்பரம் நடராஜர் கோயில்

x

சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையேயான வாக்குவாதத்தின் போது, கனக சபையில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் நுழைந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டத்தை முன்னிட்டு 4 நாட்களுக்கு பக்தர்கள் யாரும் கோயிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்து, தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் உதவியுடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பதாகையை அகற்றச் சென்றபோது, அதிகாரிகளிடமும், பக்தர்களிடமும், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 26ம் ஆம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டது.

பின்னர் பதாகையை அகற்றிய பிறகும் முரண்டு பிடித்த தீட்சிதர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கனகசபையில் ஏறி வழிபட அனுமதி மறுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில், அதிகாரிகள் கனகசபையின் பிரதான வழியே உள்ளே சென்றதால் பதற்றம் அதிகரித்தது. இதனால் தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கனக சபையில் ஏறிய 6 பேரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.

அதனை தொடர்ந்து கனக சபையில் அதிகாரிகள் நுழைந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தீட்சிதர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு பதிலடியாக தீட்சிதர்கள் தரப்பிலும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்