ஆயுள் தண்டனை கைதி தயாரித்த இ-சைக்கிள் | Erode
கோவை மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி ஒருவர் சோலார் பேனல் மூலம் இயங்கும் சைக்கிளை தயாரித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கவுந்தபாடியை சேர்ந்தவர் யுக ஆதித்தன். இவர் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்த நிலையில், அழகாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். யுகஆதித்தன் சிறையில் இருந்தபடியே தான் படித்த கல்வியை பயனுள்ளதாக்கும் வகையில் இ-சைக்கிள் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த இ-சைக்கிள் 3 விதமாக இயங்கும் வகையில் அவர் உருவாக்கி இருக்கிறார். இந்த சைக்கிளை சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெறும் சோலார் பேனல் மூலம் இயக்கலாம். அல்லது சைக்கிளை மிதிக்கும் போது டைனமோவில் இருந்து வரும் மின்சாரத்தை கொண்டு இயக்கலாம். 3-வது பேட்டரியில் சார்ஜ் ஏற்றிக் கொண்டும் ஓட்டலாம். தற்போது இந்த இ-சைக்கிளை சிறை வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது யுக ஆதித்தன் இ-ஆட்டோ ரிக்ஷாவை தயாரித்து வருகிறார். ஓரிரு மாதங்களில் இந்த பணி முடிவடையும் என்றும், அதன் பின்னர் மின்சார ஆட்டோவை சிறை வளாகத்தில் ரோந்து பணியில் பயன்படுத்த உள்ளதாக கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
