"பஸ் ஓட்டி சீன் போட்டதால் டிஸ்மிஸ்".. கோவை ரூட்டு தலைவி ஷர்மிளாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.. நிஜம் யார் பக்கம்?

x

கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரின் பாராட்டுக்களை பெற்ற பெண் ஓட்டுனரின் பணி நீக்கத்திற்கு என்ன காரணம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

இதெல்லாம் ஆமளங்க செய்யுற வேல, பொம்பள பிள்ள நீ தள்ளி நில்லு என்று சொல்லும் உலகில் ஆண்களுக்கு நிகராக பேருந்தை லாவகமாக இயக்கி பெரும் பாராட்டை பெற்றவர் ஷர்மிளா....

காக்கி உடையில் கண்ணியமான பேச்சு, பேருந்து மீது தீராக்காதல், துறுதுறுவென இருக்கும் அவரது செயல்பாடு என ஒரே பொழுதில் ஒட்டுமொத்த தமிழகத்தின் செல்லப்பிள்ளையாக மாறிப்போனார் ஷர்மிளா...

சைக்கிள் ஓட்டுவதற்கு கூட பயந்து தயக்கம் காட்டும் பெண்களுக்கு மத்தியில், ஜன நெருக்கடி மிகுந்த கோவை நகர வீதிகளில் அநாயசமாக பேருந்தை இயக்கி பெண்களுக்கு பெரும் இன்ஸ்பிரஷேனாக மாறினார்....

கோவை காந்திபுரம் - சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கும் ஷர்மிளா உள்ளூர் மட்டுமன்றி இந்திய அளவிலும் ஃபேமஸ். சமூக வலைத்தளங்களில் தினசரி பேருந்தை இயக்கும் ரீல்ஸ் செய்து கலக்கி வந்தார். அத்தோடு யூடியூபிலும் ஷர்மிளாவின் நேர்காணல்கள் வைரலாகி வந்தன.

ஆட்டோ ஓட்டுநரான தந்தையை பார்த்து வளர்ந்த ஷர்மிளா தானும் ஓட்டுனராக வேண்டும் என்ற கனவுடனே இருந்துள்ளார். ஆட்டோ, டாக்சி மற்றும் பல வாகனங்களை சாதுரியமாக இயக்கும் ஷர்மிளா கனரக வாகன உரிமம் பெற்று 24 வயதில் பேருந்து ஓட்டுனராக பணிக்கு சென்றார்.

கோவையை கலக்கி வந்த ஷர்மிளாவுக்கு பல தரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிந்தது. அண்மையில் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணித்தார். அதே போல் திமுக எம்.பி. கனிமொழி ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணித்து அவரை பாராட்டி பேசினார்.

இப்படி துணிச்சலுடன் வலம்வந்த ஷர்மிளா இன்று கண்கலங்கி நிற்கும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.பி. கனிமொழி பயணத்தின் போது அங்கிருந்த பெண் நடத்துனர் கனிமொழியிடம் டிக்கெட் கேட்டுள்ளார். இதனால் பெண் நடத்துனருக்கும் ஓட்டுனர் ஷர்மிளாவிற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தனது அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளார் ஷர்மிளா. இதில் ஷர்மிளாவுக்கும் பேருந்து உரிமையாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது விளம்பரத்திற்காக பேருந்தில் ஆட்களை ஏற்றுவதாக கூறி பேருந்து உரிமையாளர், ஷர்மிளாவை பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

எம்.பி. கனிமொழியிடம் டிக்கெட் வாங்கியதாக தகராறு

பெண் நடத்துனருக்கும், ஷர்மிளாவிற்கும் வாக்குவாதம்))

மகள் ஷர்மிளாவின் நிலையை குறித்து வருந்திய தந்தை மகேஷ் முறையிட சென்ற போது, மகளை அழைத்து கொண்டு கிளம்பு என உரிமையாளர் கூறியதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.

மகளுக்காக உரிமையாளரிடம் முறையிட்ட தந்தை மகேஷ்

மகளை கூட்டிக்கிட்டு கிளம்பு என கூறியதாக வருத்தம் ))

இதுகுறித்து விளக்கமளித்த தனியார் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு, ஷர்மிளாவை தான் பணிநீக்கம் செய்யவில்லை என்றும் அவர்தான் பேருந்தில் இருந்து பாதியிலேயே இறங்கி சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்ச்னைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் பெண் நடத்துனர் அண்ணத்தாய், கூறுகையில், எம்.பி. கனிமொழியிடம் டிக்கெட் கேட்டதற்காக, இறங்கிய பிறகு ஷர்மிளா தன்னிடம் சண்டையிட்டதாக தெரிவித்தார்.

பணிபறிபோன சோகத்தில், லட்சியத்துக்காகவே பணி செய்ய வந்ததாக கண்ணீர் மல்க தெரிவித்த ஷர்மிளா, இனி ஆட்டோவோ அல்லது டாக்சியோ ஓட்டிக்கொள்வேன் என வேதனையுடன் கூறினார்

ஷர்மிளா, பேருந்து ஓட்டுநர்

முன்மாதிரியாக திகழ்ந்த பெண்ணுக்கா இந்த நிலை என்று பரிதாபம் ஒருபுறம், சுய விளம்பரத்தால் அவருக்கு வேலை போய்விட்டது என்று பரிகாசம் ஒருபக்கம், பிரபலங்களினால் வேலை போய்விட்டது என்று விதண்டாவாதம் ஒருபுறம் என மீண்டும் சமூக வலைதளத்தில் பேசு பொருளாகியிருக்கிறார் ஷர்மிளா.

ஷர்மிளாவிற்கு வேலை பறிபோன விவரத்தை அறிந்த எம்.பி. கனிமொழி, அவரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது அவருக்கு வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்