தீ வைத்து எரிக்கப்பட்ட வாக்குப்பெட்டி... கள்ள ஓட்டுகள் போட்டதால் ஆத்திரம்
மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட்டதால் வாக்குப்பெட்டியை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, கூச்பிஹார் மாவட்டம், தின்ஹடா பகுதியில் கள்ள ஓட்டு போடப்படுவதாக வாக்காளர்கள் குற்றம் சாட்டினர். மேலும், அங்கிருந்த வாக்குப்பெட்டியை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு நிலவியது. அதேபகுதியில் வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளியில் வாக்குப்பெட்டி மீது தண்ணீர் ஊற்றப்பட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வன்முறை மற்றும் கொலை சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக, மேற்குவங்க ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்தார். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கு வாக்குச்சீட்டு தான் தேவை என்றும் தோட்டாக்கள் அல்ல என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். இதனிடையே, மாநிலம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக, பா.ஜ.க மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார். மத்தியப்படைகள் பணியமர்த்தப்படவில்லை என்றும், சி.சி.டி.வி. கேமராக்கள் செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். வன்முறைச் சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், குடிமக்களை காக்கும் பொறுப்பில் மத்தியப்படை தோல்வியடைந்துவிட்டதாகவும் மேற்குவங்க அமைச்சர் சசி பஞ்சா குற்றம் சாட்டினார். இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக, எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. கொல்கத்தா சென்றடைந்தார்.