கீழே தள்ளிக்கொண்டே இருக்கும் அமெரிக்கா.. விழ விழ எழுந்து திருப்பியடிக்கும் இந்தியா - ராஜதந்திரத்தில் ஜெயித்தது யார்?

x

நான்கு நாள் பயணமாக, சற்று முன், பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில், 75 ஆண்டுகளில் இந்திய அமெரிக்கா உறவுகள் பற்றி பார்க்கலாம்..

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின், இந்திய அமெரிக்க இடையே நேரடி உறவுகள் உருவாகி, பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் தொடர்கின்றன.

அமெரிக்காவிற்கு, சோவியத் ரஷ்யாவிற்கும் இடையே 45 ஆண்டுகளாக, 1990 வரை நடந்த மறைமுக, பனிப் போரின் தாக்கம், இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்கா அல்லது சோவியத் ரஷ்யா ஆதரவு நிலையை எடுக்க வேண்டிய சூழல் உருவானது. ஆனால், இரண்டு அணிகளுக்கும் பதிலாக, மூன்றாவதாக, அணி சேரா நாடுகள் கூட்டமைப்பை அன்றைய பிரதமர் நேரு உருவாக்கியதை அமெரிக்கா விரும்பவில்லை.

1954ல் சோவியத் ரஷ்யாவின் அச்சுறுத்தலில் இருந்து ஆசிய நாடுகளை பாதுகாக்க, சென்டோ ராணுவ கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கியது. இதில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்ததால், இந்தியா, அமெரிக்க உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்தியாவுடன் நல்லுறவுகளை பேணவும், இந்தியாவில் கம்யூனிச பரவலை தடுக்கவும், இந்தியாவிற்கு அமெரிக்கா ஏராளமான நிதி உதவிகளை அளித்தது. இந்தியாவில் ஏற்பட்ட உணவு தானிய பற்றாக்குறையை சமாளிக்க, பெரிய அளவில் கோதுமையை இலவசமாக அனுப்பி உதவியது.

1965ல் இந்தியா முன்னெடுத்த பசுமை புரட்சிக்கு பெரிய அளவில் தொழில்நுட்ப உதவிகளை அளித்தது.

1946 முதல் 2012 வரை மொத்தம் 6,510 கோடி டாலர் அளவுக்கு உணவு மற்றும் நிதி உதவிகளை இந்தியாவிற்கு அளித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஜான் எஃப் கென்னடி அமெரிக்க அதிபராக இருந்த போது, இந்திய அமெரிக்க உறவுகள் மேம்பட்டன. 1962ல் இந்தியா மீது சீனா போர் தொடுத்த போது, இந்தியாவிற்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா அளித்து உதவியது.

ஆனால் 1963ல் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட பின், இரு நாட்டு உறவுகள் மோச மடைந்தன. வியாட்நாமில் கம்யூனிஸ ஆட்சி ஏற்படுவதை தடுக்க, அமெரிக்கா வியட்நாம் மீது படையெடுத்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்தது.

ஆசியாவில் கம்யூனிச பரவலை தடுக்க, பாகிஸ்தான், அமெரிக்க உறவுகள் பலப்பட்டதால், அதை எதிர் கொள்ள, சோவியத் ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தக, ராணுவ உறவுகளை பலப்படுத்தியது.

1971ல் வங்க தேச விடுதலை தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் போர் ஏற்பட்ட போது, பாகிஸ்தானிற்கு அமெரிக்கா முழு ஆதரவு தெரிவித்து, ஏராளமான ஆயுத உதவிகளை அளித்தது.

1979ல் ஆப்கானிஸ்தான் மீது சோவியத் ரஷ்யா படையெடுத்த பின், ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற, பாகிஸ்தான் மூலம் ஏராளமான ஆயுதங்களை, ஆப்கன் போராளிகளுக்கு அமெரிக்கா அளித்தது. இது இந்தியா அமெரிக்கா உறவுகளை மேலும் பாதித்தது.

1998ல் இந்தியா அணு குண்டு சோதனைகளை நடத்தி யதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.

மன்மோகன் சிங் ஆட்சியின் போது, இந்தியா அமெரிக்கா உறவுகள் சீரடைந்து, அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.

2014ல் நரேந்திர மோடி பிரதமரான பிறகு, இரு நாட்டு உறவுகள், இதுவரை இல்லாத அளவுக்கு மேம்பட்டுள்ளன. சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து ஆசிய நாடுகளை பாதுகாக்க, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா இந்தியா இடையே குவாட் ராணுவ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடி ஆறாவது முறையாக அமெரிக்கா செல்வது, இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்