கள்ளஉறவு; செக்ஸ் டார்ச்சர்... இரவெல்லாம் நரக வேதனை தோழியுடன் சேர்ந்து மனைவி நிகழ்த்திய பயங்கரம்...

x

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே தம்பி பேட்டை பாளையத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில், அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கடலூர் பச்சையங்குப்பம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜசேகர் என்பதும், இவரது மனைவி மஞ்சுளா எனவும் தெரிய வந்தது. கணவர் இறந்து கிடந்த விவரத்தை மஞ்சுளாவிடம் போலீசார் கூறிய நிலையில், அவரை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்தனர்.

கணவர் காணாமல் போய் எத்தனை நாள் ஆனது? ஏன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என போலீசார் பல்வேறு கேள்விகளால் மஞ்சுளாவை துளைத்தெடுத்தனர். போலீசாரின் விசாரணையில் திணறிய அவர், ஒரு கட்டத்தில் கணவனை கொலை செய்தது நான்தான் எனக் கூறியது, போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தது.இறந்த ராஜசேகருக்கும், மஞ்சுளாவுக்கும் திருமணமாகி, 3 பெண் குழந்தைகள் உள்ளன. ஆனால், ராஜசேகருக்கு திருப்பூரை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்ததுள்ளது. இந்த விவகாரம், மனைவி மஞ்சுளாவுக்கு தெரியவர, வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதலியை பார்க்க, கடலூரில் இருந்து அடிக்கடி திருப்பூருக்கு செல்லும் ராஜசேகர், மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளின் நிலையை யோசிக்காததால், குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. மேலும், மனைவிக்கு அடிக்கடி கட்டாய பாலியல் தொல்லை கொடுத்து வந்த ராஜசேகர், அதற்கு மறுத்தால், இரவு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தி விட்டு குடும்பத்தினரை தவிக்க விட்டு செல்வதும்தான் அவரது போக்காக இருந்து வந்துள்ளது. கணவனின் கொடுமை தாங்க முடியாமல், ஒரு கட்டத்தில் விரக்தியில் இருந்த மஞ்சுளா, இதுகுறித்து தனது தோழியான வினோதினி மற்றும் அவரது கணவர் சசிக்குமாரிடம், கணவனின் துன்புறுத்தல் குறித்து கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

கணவரைக் கொன்றால்தான் வாழ முடியும் என்ற முடிவுக்கு வந்த மஞ்சுளா, தனது தோழியான வினோதினி மற்றும் அவரது கணவருடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.அதன்படி, கணவர் ராஜசேகரை, வினோதினியின் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து வந்துள்ளார் மஞ்சுளா... அப்போது, சசிக்குமார், அவரது நண்பர் மோகன் ஆகியோர் சேர்ந்து, வெளிநாட்டு மதுபானம் இருப்பதாகக் கூறி, ராஜசேகரை அழைத்துச் சென்று குடித்துள்ளனர். அப்போது ராஜசேகருக்கு வழங்கிய மதுபானத்தில் மட்டும் விஷம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அருந்திய ராஜசேகர், அங்கேயே உயிரிழந்துள்ளார். கொலையை மறைக்க திட்டம் தீட்டிய 4 பேரும், ராஜசேகரின் உடலை எடுத்துக் கொண்டு, அருகேயுள்ள கரும்பு தோட்டத்தில் வீசியதாக, மஞ்சுளா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து, மஞ்சுளா, வினோதினி, சசிக்குமார், மோகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்பொறுப்பே இல்லாத கணவனால், அவரது உயிரும் பிரிந்தது, மனைவியும் சிறைக்கு சென்றார்... ஆனால், 3 பெண் பிள்ளைகள் உதவிக்கரம் இன்றி தவித்து வருவதுதான் சோகத்திலும் சோகம்...


Next Story

மேலும் செய்திகள்