தீப்பெட்டி வாங்க கூட ஆபத்தான பரிசல் பயணம்.தீவு போல் மாறிய கிராமம்.ஆற்றை கடக்கும் திக் திக் நிமிடம்!

x

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே போகிபுரம் கிராம மக்கள் 3 வருடங்களாக அன்றாட தேவைக்கு கூட ஆபத்தான பரிசல் பயணத்தையே மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் மக்களுக்கு ஏன் இந்த நிலை..அவதிப்படும் மக்களுக்கு மாற்று வழி என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

உயிருக்கே ஆபத்து என்றாலும் உயிரை பணயம் வைத்தே பரிசில் பயணம்....தீவு போல மாறிய கிராமத்தில் திணறும் மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட போகிபுரம் கிராமம்,

வேம்பள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்ட சின்னாறு அணை நடுவில் தீவு போல் அமைந்துள்ளது.

இந்த சின்னாறு அணை அமைக்கப்பட்டபோது சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்த மக்கள் அனைவரும் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்த நிலையில், 40 ஆண்டுகளாக போகிபுரம் கிராம மக்கள்

தங்கள் சொந்த மண்ணிலேயே வசித்து வருகின்றனர்.

3 வருடங்களுக்கு முன்பு வரை அணையில் நீர்வரத்து குறைவாக இருந்ததால் சாலையை பயன்படுத்தி வந்த மக்கள் மழைக்காலங்களில் சாலைகளில்

நீர் சூழ்ந்து அவதிக்கு ஆளாகி வந்துள்ளனர். இதனால் பாதுகாப்பாக வந்து செல்ல மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என போகிபுரம் கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

மக்கள் கோரிக்கையின் படி மேம்பால பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில், சின்னாறு அணைக்கு நீர் திறக்கப்பட்டதால் நீர் வரத்து அதிகரித்து மேம்பாலம் கட்டும் பணி

பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் கிராமத்தை சுற்றி தீவு போல நீர் சூழ்ந்துள்ளதால் சாலை வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் அனைத்துமே சூளகிரி

சென்று தான் வாங்க வேண்டும் என்பதால் தீப்பெட்டிக்கு கூட உயிரை பணயம் வைத்து பரிசிலில் கயிறு கட்டி செல்ல வேண்டியதுள்ளது. உடல்நிலைக்குறைவால் யாரேனும்

பாதிக்கப்பட்டால் ஆம்புலன்ஸ் கூட ஊருக்குள் நுழைய முடியாத நிலையே நிலவுவதால் தள்ளாடும் முதியவர் முதல் கர்ப்பிணி பெண் வரை அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனால் இக்கிராம இளைஞர்களுக்கு பெண் கூட தருவதில்லை என கிராம மக்கள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து பல முறை மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என பல இடங்களில் மனு

அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என வேதனை தெரிவித்த கிராம மக்கள், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு, மேம்பாலம் அமைத்து

பணிகளை முடித்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்