ஐஸ் வியாபாரி கொடூரமாக வெட்டிக்கொலை.. காப்பாற்ற முயன்ற மகனுக்குக்கும் அரிவாள் வெட்டு…

x

வாகன ஓட்டிகளால் அந்த இடத்தை அவ்வளவு எளிதில் கடந்த செல்ல முடியவில்லை

ஒட்டுமொத்தக் கூட்டமும் நடந்த படுபயங்கர சம்பத்தால் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

பட்டப்பகலில் தந்தை மகன் இருவரையும் ஒரு மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி இருக்கிறது

சம்பவ இடத்திலேயே தந்தை இறந்துவிட்ட நிலையில், மருத்துவமனையில் வெட்டு காயங்களோடு சிகிச்சை பெற்றுவந்த மகனிடமிருந்து விசாரணை வேகமெடுத்தது…

கொல்லப்பட்டவர் மணப்பாறை அடுத்த கரும்புளிப்பட்டியை சேர்ந்த 65 வயதான குப்புசாமி. இவரின் முதல் மனைவி வெளியூரில் இருப்பதால் இரண்டாவது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்திருக்கிறார்.

ஐஸ் வியாபாரம் செய்துவந்த குப்புசாமி சொந்த ஊரில் பருத்தி விவசாயமும் செய்து வந்திருக்கிறார்… இந்த சூழலில்தான், காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முன்விரோதம் குப்புசாமி குடும்பத்தின் நிம்மதிக்கு தீ வைத்திருக்கிறது.

ஆம், குப்புசாமி சகோதரியின் பேத்தியை அதே கிராமத்தை சேர்ந்த ஜீவா என்ற இளைஞர் ஒருதலையாகக் காதலித்து வந்திருக்கிறார். ஏற்கனவே ஜீவாவின் குடும்பத்திற்கும், குப்புசாமி குடும்பத்திற்குமிடையே நிலதகராறும் இருந்திருக்கிறது.

இந்த சூழலில் பள்ளி சிறுமிக்கு ஜீவா லவ் டார்ச்சர் கொடுத்தது குப்புசாமிக்கு ஆத்திரத்தை வரவழைத்திருக்கிறது. உடனே பஞ்சாயத்தை கூட்டி இந்த பிரச்சனையை சுமூகமாக பேசி முடித்திருக்கிறார்கள்.

ஆனால், ஜீவாவின் காதலுக்கு முற்று புள்ளி வைத்த மறுநாளே அவரின் சகோதரன் பிரவீன் அந்த சிறுமி மீது காதல் கொண்டிருக்கிறார்.

பிரவீன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் மீண்டும் காதல் விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவாரத்தை நடத்தியிருக்கிறார் குப்புசாமி.

ஒருகட்டத்தில் அந்த பேச்சுவார்த்தை அடிதடியாக மாறி சண்டையில் முடிந்திருக்கிறது. அதில் குப்புசாமி சகோதரர்கள் இருவரையும் கை நீட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக கடந்த ஜனவரி மாதமே காவல் நிலையத்திலும் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

குடும்ப சண்டை காவல் நிலையம்வரை சென்றதால் சொந்த ஊரை காலி செய்துவிட்டு பக்கத்து ஊருக்கு குடியேறி இருக்கிறார் குப்புசாமி .

பிரச்சனைகள் வேண்டாமென குப்புசாமி விலகி சென்றாலும் பகை அவரை விடாமல் துரத்தி இருக்கிறது. வழக்கின் விசாரணையும் குப்புசாமிக்கு ஆதரவாக இருப்பதை அறிந்த பிரவீன் தரப்பினர் தீர்ப்பு வருவதற்குள் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார்கள்.

சம்பவத்தன்று கலிங்கபட்டி சாலை வழியாக குப்புசாமியும் அவரது மகன் மாரிமுத்துவும் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்கள், அவர்களை வழிமறித்த பிரவீனும் அவரது கூட்டாளிகளும் அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டி இருக்கிறார்கள்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குப்புசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோயிருக்கிறார். மேலும் தந்தையை காப்பாற்ற முயன்ற குப்புசாமியின் மகன் மாரிமுத்துவுக்கும் பலத்த அரிவாள் வெட்டு காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரவீன்-ஐயும் அவரது கூட்டாளிகள் ஆறுபேரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்