ஆபிஸ் போற மாதிரி கிளம்பும் ஜோடி..காலி தெருவை பார்த்து செய்யும் பகீர் செயல்.. சிக்கிய கபுல்ஸ்..சம்பவம் செய்து விட்ட மக்கள் - சென்னையில் அதிர்ச்சி

x

கோடை வெயிலைப் பயன்படுத்தி, நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த தம்பதியை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சுவாரஸ்ய சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஷ் - பூஜா தம்பதி... அலுவலகத்திற்கு செல்வதுபோல் உடை அணிந்து செல்லும் இந்த ஜோடி, சென்னை புறநகர் பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களை தேர்ந்தெடுத்து நோட்டமிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

திடீரென ஏதாவது ஒரு வீட்டிற்கு முன்பு, இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, உறவினர் வீடு போல உள்ளே செல்லும் ஜோடி, அங்கிருக்கும், மின் மோட்டார்களை திருடிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளது.

தினமும் 3 மின்மோட்டார்கள் என டார்கெட் வைத்து திருடும் ராஜேஷ் - பூஜா தம்பதி, திருடிய மின்மோட்டார்களை விற்று, மது வாங்கி குடித்து, உல்லாசமாக இருந்து வந்துள்ளது.

மின்மோட்டார்கள் திருடுபோனால், காவல்நிலையத்தில் புகார் அளிக்கமாட்டார்கள் என்பதால், அப்படியே புகார் அளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில், தம்பதியினர் இருவரும், திட்டமிட்டு தங்களுடைய வேட்டையை நடத்தி வந்துள்ளனர்.

இதனிடையே, பெருங்களத்தூர் தங்கராஜ் நகரில், கடந்த 6ம் தேதி, மின்மோட்டாரை திருடிக்கொண்டு, இந்த ஜோடி இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சி தந்தி தொலைக்காட்சியில் பதிவிடப்பட்டது.

இந்த செய்தியை, பீர்க்கன்கரனை பெருங்களத்தூர் குடியிருப்போர் நல சங்கத்தினர் வாட்ஸ் அப் குரூப் களில் பதிவிட்டு, குடியிருப்பு வாசிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், பழைய பெருங்களத்தூர் அப்துல் கலாம் பூங்கா அருகே, குடியிருப்போர் நல சங்க நிர்வாகி பாபு என்பவர் , இருசக்கர வாகனத்தில் மோட்டாருடன் சென்ற ஜோடியை சந்தேகப்பட்டு மடக்கிப் பிடித்துள்ளார். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் வரவே, மற்ற குடியிருப்புவாசிகள் அங்கு திரண்டனர்.

அப்போது, அவர்களது இருசக்கர வாகனத்தில், மின் மோட்டார்கள், பேட்டரிகள் இருந்ததுடன், கையில் வைத்திருந்த மதுபாட்டில்களையும் பொதுமக்கள் பறிமுதல் செய்தனர்.

தகவலின் பேரில் வந்த போலீசார், களவாணி ஜோடியை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

முகத்தில் எந்த சலசலப்பும் இல்லாமல், தம்பதி இருவரும் அசால்ட்டாக குடியிருப்பு பகுதிகளில் மின்மோட்டார்களை திருடிச் சென்ற சம்பவம், பழைய பெருங்களத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்