எமனாய் மாறிய பைக் டாக்சி பயணம்... அம்மாவிடம் ஆசி பெற சென்றவர் தூக்கி எறியப்பட்டு சடலமான கொடுமை - பிறந்தநாளே இறந்தநாளான அதிர்ச்சி சம்பவம்..!

x

பிறந்த நாள் வாழ்த்து பெறுவதற்காக தாய் வீட்டிற்கு பைக் டாக்சியில் சென்று கொண்டிருந்த பெண் ஒப்பனைக் கலைஞர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

தொடர் சர்ச்சைகளுடன் பயணித்து வருகிறது இந்த பைக் டாக்சி சேவை...

குறைவான கட்டணம் என்பதால் வாடிக்கையாளர்கள் பைக் வசதியை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்...

ஆனால் இதைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சில பைக் டாக்சி ஓட்டுநர்கள் பெண் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பது... வாடிக்கையாளர்களை மிரட்டி அதிக பணம் வசூலிப்பது... தர மறுத்தால் செல்போன் எண்ணைக் கொண்டு வெவ்வேறு எண்களில் இருந்து அழைத்து ஆபாசமாக பேசுவது என விஷமத் தனமான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்...

மேலும் விதிகளைப் பின்பற்றாமல் வாகனத்தை இயக்குவதால் விபத்துகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன...

கடந்த ஆண்டு தாம்பரத்தில் கூட பைக் டாக்சி விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்...

கடந்த மாதம் ஐதராபாத்தில் கூட இதே போன்ற விபத்தில் பெண் ஒருவர் பலியானார்..

இந்நிலையில், அதேபோன்ற சம்பவம் ஒன்று சென்னையில் நிகழ்ந்துள்ளது...

மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 34 வயதான ஒப்பனைக் கலைஞர் சேவிகாவுக்கு இன்று பிறந்த நாள்... இரவு பணிக்குச் சென்ற சேவிகா, 12 மணியளவில் செல்போன் லைவில் கேக் வெட்டி தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உரையாடியுள்ளார்...

விடிந்ததும் முதல் வேளையாக தன் தாயார் இல்லத்திற்குச் சென்று ஆசி பெற வேண்டும் என ஆசை ஆசையாய் காத்திருந்தார் சேவிகா...

உடனடியாக பைக்- டாக்சி-ஐ புக் செய்து தன் தாய் வீட்டிற்கு வாழ்த்து பெறும் மகிழ்ச்சியோடு பயணித்துக் கொண்டிருந்தார்...

தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே பைக் சென்று கொண்டிருந்தது...

அப்போதுதான் யாரும் எதிர்பாரா வண்ணம் அந்த கொடூரம் அரங்கேறியது... திடீரென பைக் மீது டிப்பர் லாரி ஒன்று மோதி விட்டு நில்லாமல் பறந்து விட்டது...

நிலைதடுமாறி கீழே விழுந்து சேவிகா தலைக்கவசம் அணியாததால் பலத்த காயம் அடைந்தார்... தகவலறிந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் அசைவின்றி கிடந்த சேவிகாவை உடனடியாக மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

ஆனால் மருத்துவர்களோ சேவிகா ஏற்கனவே இறந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தனர்...

பிறந்த நாள் கொண்டாட வந்த தங்கள் வீட்டுப் பெண் சாலை விபத்தில் பலியானதைக் கண்டு சேவிகாவின் உறவினர்கள் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கதறியழுத காட்சி காண்போரைக் கண்கலங்கச் செய்தது...

இந்நிலையில், சேவிகாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க சந்தேகம் தெரிவித்தது நம்மை அதிரச் செய்தது...


Next Story

மேலும் செய்திகள்