(09.07.2023) ஊர்ப்பக்கம் | Oorpakkam | தமிழக செய்திகள் | Thanthi TV

x

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை வாரச்சந்தையில், ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல், இஞ்சி ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம் மாவட்டம் காருவள்ளி ஆட்டுச் சந்தையில் செம்மறி ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஆடி பண்டிகை நெருங்கும் நிலையில், மக்கள் அதிகளவில் ஆடுகள் வாங்கிச் சென்றதால், இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி அருகே, காரை வழிமறித்து ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் கைதான கேரளாவை சேர்ந்த மூன்று பேர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். மூன்றடைப்பு அருகே, காரை வழிமறித்த மூன்று பேர், திருநெல்வேலியை சேர்ந்த சுஷாந்த்குமார் என்பவரை தாக்கிவிட்டு, ஒன்றரை கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பூசாரியை வெட்டிக் படுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், ரமேஷ், சரத்குமார், தினேஷ்குமார் ஆகியோரை பிடித்த போலீசார், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலையாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்