"போருக்கும் தயார்" - அமெரிக்காவிற்கு ஈரான் தூதர் பகிரங்க எச்சரிக்கை ஈரானின் வலிமையை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி, அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கும் அதே வேளையில் போரையும் சந்திக்க ஈரான் தயார் நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈரான் தூதர் டாக்டர் முகமது ஃபதாலி, இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் அணுசக்தி, இழப்பீடுகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து ஈரான் சில முக்கியப் புள்ளிகளை முன்வைத்த போதிலும், அமெரிக்கா சட்டவிரோதக் கோரிக்கைகளை வலியுறுத்துவதாக தெரிவித்தார். மேலும், இந்தப் போரில் அமெரிக்காவை இழுத்துவிட இஸ்ரேல் முயற்சிப்பதாகவும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கான ஒரு புதிய நடைமுறையை ஈரான் விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.