தென்னை விவசாயம் காக்கப்படும் என பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராஜா மில் ரோடு, ஜூப்பிலி கிணறு வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், தென்னை விவசாயத்தைத் தாக்கியுள்ள வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் துயரங்களை எடுத்துரைத்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், சிறந்த விஞ்ஞானிகள் மூலம் உரிய ஆராய்ச்சி செய்யப்பட்டுத் தென்னை மரங்களைப் பாதிக்கும் நோய்களுக்குத் தீர்வு காணப்பட்டு, விவசாயிகளுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.