தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைக்கும், ஆதவ் அர்ஜுனா திமுகவையே குற்றம் சாட்டுவது தவறானது என, திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் கூறியுள்ளார். சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன், ராஜமங்கலம் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு மேள தாளங்கள் முழங்க, நடனக் கலைஞர்களின் ஆடல் பாடலுடன் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வின் போது கார்த்திக் மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுத் தாக்கல் விவகாரத்தில், திமுகவினர் தலையிட்டுத் தாமதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ளும் சட்ட ரீதியான நடைமுறைகளை, திமுகவினர் செய்ததாகக் குற்றம் சாட்டுவது முற்றிலும் தவறானது என அவர் பதிலளித்தார்.