தென் கொரிய அதிபர் யூன் சூக் யோல் சமீபத்தில் ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சியினரும் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவசர நிலையை அவர் திரும்பப் பெற்றார். யூனின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர், அவரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் யூனின் சொந்தக் கட்சியினர் வாக்களிப்பை புறக்கணித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனையடுத்து யூனுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மீண்டும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தனர். 204 எம்.பிக்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் யூன் சூக் யோலின் பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்பதால், பிரதமர் ஹான் டக் சூ இடைக்கால அதிபராக செயல்படுவார் என்றும், யூனின் அதிகாரங்கள் நிறுத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.