போப் லியோ Vs டிரம்ப் - போரை நிறுத்துமா வார்த்தைப் போர் உலக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதுவித யுத்தம்.. ஒரு பக்கம் உலகின் வல்லரசு அதிபர் டொனால்ட் டிரம்ப்... மறுபக்கம் கத்தோலிக்க திருச்சபையின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட போப் லியோ "நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்" என போப் முழங்க, "அரசியல் செய்யாதீர்கள்" என டிரம்ப் சீற, வாடிகனுக்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையே வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது... யார் இந்த போப் லியோ?... வரலாற்றிலேயே முதல்முறையாக அமெரிக்க மண்ணில் பிறந்த ஒருவர், கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரானது உலகையே வியக்க வைத்தது.... சிகாகோவில் பிறந்து வளர்ந்த லியோ, இளம் வயதிலேயே சமூக நீதிக்காகப் போராடியவர். வழக்கமான போப் ஆண்டவர்களைப் போல அல்லாமல், அநீதிகளை நேரடியாகச் சுட்டிக்காட்டுவதுதான் இவரது ஸ்டைல். ஒரு அமெரிக்கராக இருந்து கொண்டே, அமெரிக்க அதிபரை எதிர்ப்பதுதான் இந்த மோதலின் மிகச் சுவாரஸ்யமான புள்ளி... ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் குறித்து வாடிகனில் நடந்த திருப்பலியின் போது, போப் லியோ ஆற்றிய உரைதான் இந்த நெருப்புக்குக் காரணம். "போர்களை நடத்துபவர்கள், தங்களைச் சர்வ வல்லமை படைத்தவர்களாக நினைக்கும் மாயையில் வாழ்கிறார்கள்" என டிரம்ப் நிர்வாகத்தை நேரடியாகச் சாடினார். "ஆயுதங்களை விட அமைதிக்கு வலிமை அதிகம்" என அவர் விடுத்த அறைகூவல், வாஷிங்டனில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது... இதற்குத் தனது பாணியிலேயே பதிலடி கொடுத்த டிரம்ப், "போப் லியோ ஒரு இடதுசாரி அரசியல்வாதி போலச் செயல்படுகிறார்" எனச் சீறினார். இதன் உச்சகட்டமாக, தன்னை இயேசு கிறிஸ்துவைப் போன்ற தோற்றத்தில் சித்தரித்து, உலகைப் பாதுகாக்க வந்த மீட்பர் என்பது போன்ற சர்ச்சைக்குரிய புகைப்படத்தையும் வெளியிட்டு அதிர வைத்தார் டிரம்ப்... இதற்குப் பதிலடி கொடுத்த போப், "நற்செய்தியைப் புரியாதவர்கள்தான் எனக்கு அரசியல் முத்திரை குத்துகிறார்கள். டிரம்ப் நிர்வாகத்தைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்... அமைதிக்காகக் குரல் கொடுப்பதே என் கடமை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்... ஏற்கனவே போப் பிரன்சிஸ்க்கும், டிரம்புக்கும் இடையே சில விஷயங்களில் மோதல் இருந்தது.. ஆனால் இப்போது ராஜதந்திரத்தை உடைத்து நேரடியாக மல்லுக்கட்டும் போப் லியோவின் இந்த அறைகூவல், போரை நிறுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்..